Posts

Showing posts from April, 2017

அன்னை மடியாகிய புவி

 மலை காடுகள் நிலம் வான் கடல் வரை யாவையும் உனதே ! அதில் விளையாடிடும் அசைந்தாடிடும் உயிர் யாவையும் உனதே ! பனிப்பாறையும் மணல்பாலையும் நெருப்பாழியும் உனதே ! உயிர்க்கருளாகிடும் இசைப்பாடிடும் மழை ஆறுகள் உனதே ! அவையாவையும் உனதாகியச்சிறு நினைப்பால் மதி இழந்தாய் ! அன்னை மடியாகிய புவி கோளினை அழித்தாளவே துணிந்தாய் ! வரும்காலம் உன்னிலை மாற்றும் வரை பொறுக்காதே ! விழித்தெழுவாய்! இன்று உனை காக்க வேறு புவியேது! அதை இழக்காதே ! பகுத்தறிவாய் !

நல்குணமே இன்முகமே

பனியென பிணி அணைந்து மறையட்டும் ! இனிதென பணி அனைத்தும் சிறக்கட்டும் !  அகத்தினில் இனிமை மலர்  மலரட்டும் ! முகத்தினில் இனிமை சுடர் ஒளிரட்டும்  ! சொற்களில் இனிமை குளிர் பரவட்டும் ! செயல்களில் இனிமை தளிர் செழிக்கட்டும் ! உயிரிருள் நீக்கும் உயரருள் சேர்க்கும் நல்குணமே இன்முகமே ! எக்கணமும் இவ்விதமே !